தாத்தாவான துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: தேஜஸ்வி சூர்யா வாழ்த்து!
தாத்தாவான துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ள வாழ்த்து குறித்து...
பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, முதன்முறையாகத் தாத்தாவானார். இந்த தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தில் பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்கும் பொதுப்பணிகளுக்கும் இடையே அவரது அர்ப்பணிப்பை தேஜஸ்வி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தாத்தாவாகியிருக்கும் டி.கே. சிவகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது மகள் ஐஸ்வர்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தொடர்ந்து இறைவன் அருள" வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
Advertisement
துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தென் பெங்களூருவில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளுக்கு இடையே காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு வீட்டிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருந்தது குறித்துக் கேட்டதற்கு, 'இன்று என் மகளுக்குப் பிரசவம் நடைபெறுகிறது; நான் தாத்தாவாகப் போகிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.
இது அந்தக் குடும்பத்திற்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். மறுபுறம், இது ஒரு பொதுப் பொறுப்பாகும். இருப்பினும், தென் பெங்களூருவில் மேம்பாலம் திறப்பு மற்றும் பல பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டதை குறிப்பிட்டுள்ள அவர், 'பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் முதல் இழப்பது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை' தான் என்று கூறப்படுவதுண்டு. இதுபோன்ற தருணங்களில், அந்தக் கூற்றின் பொருள் இன்னும் தெளிவாக உணர்த்தப்படுகிறது.
பெங்களூரு சுரங்கப்பாதை சாலைத் திட்டம் விவகாரத்தில் டி.கே. சிவகுமாரும், தேஜஸ்வியும் கடுமையான விமரிசனங்களில் ஈடுபட்டு வந்த நிலையிலும், தேஜஸ்வியின் வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும்பொருளாகி உள்ளது.