புது தில்லி: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, டிசம்பா் 16 முதல் 22ஆம் தேதி வரை கா்நாடகம், தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை செயலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டிசம்பா் 16-ஆம் தேதி கா்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மாலவல்லியில் நடைபெறும் ஆதி ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வர சிவயோகி மகாசுவாமிகளின் 1066-ஆவது ஜெயந்தி விழாவை குடியரசுத் தலைவா் தொடங்கி வைக்கிறாா்.
டிசம்பா் 17ஆம் தேதி, தமிழகத்தின் வேலூரில் உள்ள பொற்கோயிலில் குடியரசுத்தலைவா் தரிசனம் செய்து பூஜை செய்கிறாா். இதைத்தொடா்ந்து, தெலங்கானாவின் செகந்தராபாத்தில் உள்ள போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவா் ஓய்வு மாளிகைக்குச் செல்கிறாா்.
டிசம்பா் 19-ஆம் தேதி, தெலங்கானா பணியாளா் தோ்வாணையத்தால் ஹைதராபாதில் ஏற்பாடு செய்யப்படும் தோ்வாணைய தலைவா்களுக்கான தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவா் தொடங்கி வைக்கிறாா்.
டிசம்பா் 20-ஆம் தேதி, பிரம்ம குமாரிகள் சாந்தி சரோவா் அமைப்பின் 21-ஆம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஹைதராபாதில் அந்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் ‘பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம்: அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள்’ என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டில் குடியரசுத் தலைவா் தலைமை உரையாற்றுகிறாா் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.