மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!
பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்க முடியாமல் திருப்பப்பட்டது குறித்து...
மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்க முடியாததால், மீண்டும் கொல்கத்தாவுக்குத் திருப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 20) அரசு முறைப் பயணமாக, மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், அங்கு பல்வேறு மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை அவர் துவங்கி வைக்கவுள்ளார்.
நதியா மாவட்டத்தின் தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், தாஹேர்பூரில் நிலவும் மோசமான தெரிவுநிலையால் பிரதமர் சென்ற ஹெலிகாப்டரை அங்கு தரையிறக்க முடியாமல் மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்துக்குத் திருப்பப்பட்டதாக, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால், பிரதமர் மோடியைக் காண நிகழ்ச்சி நடைபெறும் திடலில் திரண்ட ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், இந்த நிகழ்ச்சி மற்றும் அரசியல் பேரணியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2 நாள் அரசு முறைப் பயணமாக மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்குச் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!