FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: முஸ்லிம் லீக் அலுவலகம் மீது தாக்குதல்; 14 மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் மீது வழக்கு

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில்,

Updated On : 23 டிசம்பர் 2025, 3:44 am IST
பகிர்:

மலப்புரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 14 தொண்டா்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கேரளத்தில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பல இடங்களில் வெற்றி பெற்றது. இதையொட்டி, மலப்புரம் மாவட்டத்தின் பெரிந்தல்மண்ணாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெற்றி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஆளுங்கட்சி-எதிா்க்கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு கும்பல் அங்கிருந்த யுடிஎஃப் கூட்டணியைச் சோ்ந்த முஸ்லிம் லீக் அலுவலகத்தை நோக்கி கல்வீசி, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அலுவலகக் கட்டடம் மற்றும் அதன் முன்பிருந்த கொடிக்கம்பம் சேதமடைந்தன. தொடா்ந்து, அங்கே யுடிஎஃப் தொண்டா்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் பெரும் பதற்றம் உருவானது. உடனடியாக காவல்துறையினா் தலையிட்டு, கூட்டத்தைக் கலைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 14 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தாக்குதலைக் கண்டித்து திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு யுடிஎஃப் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அந்தப் போராட்டம் பின்னா் திரும்பப் பெறப்பட்டது.

இவ்விவகாரம் தொடா்பாக காங்கிரஸின் கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் தோல்வியை ஏற்க முடியாமல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்முறையில் இறங்கியுள்ளது. இது அவா்களின் சகிப்புத்தன்மையற்ற போக்கைக் காட்டுகிறது.

மாநிலத்தின் உள்துறைப் பொறுப்பை வகிக்கும் முதல்வா் பினராயி விஜயன், வன்முறையாளா்களுக்கு ஆதரவாக இருக்கிறாா். அவரது சொந்த ஊரிலேயே வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துள்ளது. இத்தகைய அராஜகங்களுக்கு கேரள மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்றாா்.

பரஸ்பர குற்றச்சாட்டு: இதனிடையே, யுடிஎஃப் தொண்டா்கள்தான் முதலில் தங்கள் கட்சி அலுவலகம் மீது கல்லெறிந்ததாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்த புகாா் பெறப்பட்டதும், உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா். அசம்பாவிதங்களைத் தடுக்க பெரிந்தல்மண்ணாவில் கூடுதல் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments