கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, முன்னாள் பிரதமர் தேவெ கௌடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில், கடந்த வியாழக்கிழமை (டிச. 25) கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தும் விடியோக்கள் வெளியாகின. இந்தத் தாக்குதல்களுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு, நாட்டின் முன்னாள் பிரதமரும் ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினருமான ஹெச்.டி. தேவெ கௌடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“நாட்டின் பல்வேறு நகரங்களில், தேவாலயங்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் கடும் கண்டனத்திற்குரியவை.
இந்த நாடு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சொந்தமானது. இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார். தேவாலயங்கள் மீதான இந்த தாக்குதல்களுக்கு எதிராக அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமர் மோடி அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.