ஆதார் கட்டாயம்! டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றம்! - ஐஆர்சிடிசி அறிவிப்பு
ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது தொடர்பாக...
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. முன்னதாக இந்த நடைமுறை தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு மட்டும் இருந்தது.
பயணிகள் சிரமமின்றி ரயில்களில் பயணம் செய்யவும் அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைக்கும் பொருட்டும் இந்திய ரயில்வே அவ்வப்போது விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்வேயில் பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் மூலமாக டிக்கெட் முன்பதிவுகள் நடப்பதாகவும் இதனால் சாமானிய மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுகின்றன.
Advertisement
Advertisement
இதனால் ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதாரைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தி வருகிறது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் கட்டாயம் என ஏற்கனவே கடந்த ஜூலை 1 விதிமுறைகள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது 60 நாள்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்படுகிறது.
இதன்படி, நீங்கள் குறிப்பிட்ட தேதியில் பயணிக்க, 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனவரி 12 முதல் இது முழுமையாக அமலுக்கு வருகிறது. அவ்வாறு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைக்கவிட்டால் 60 நாள்களுக்கு முன்னதாக காலை 8 மணிக்குத் தொடங்கும் முன்பதிவில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
ஜனவரி 12 முதல் இது முழுமையாக அமலுக்கு வந்தாலும் டிச. 29 முதல் நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது டிசம்பர் 29 முதல் - காலை 8 - மதியம் 12 மணி வரை ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். மதியம் 12 மணிக்கு மேல் மட்டுமே ஆதார் இணைக்காதவர்கள் முன்பதிவு செய்ய முடியும்.
இதுவே ஜனவரி 5- லிருந்து காலை 8 - மாலை 4 மணி வரை எனவும்
ஜனவரி 12- லிருந்து காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை எனவும் நேரம் நீட்டிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஆதார் இணைக்கப்பட்டவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜனவரி 12 முதல், டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளில் முழுவதுமாக ஆதார் இணைக்கப்பட்டவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கவுன்டர்களில் சென்று டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அவர்கள் வழக்கம்போல உரிய ஆவணங்களை அளித்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மையான முறையில் டிக்கெட் பெற்று தகுதியான பயணிகள் பயணிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏஜெண்டுகள் டிக்கெட் முன்பதிவு செய்வதை இது தடுக்கும், ஏனெனில் அவர்கள் விழாக் காலங்களில் டிக்கெட்டுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 4,000 வரை வசூல் செய்கிறார்கள், எனவே இந்த நடவடிக்கை மூலமாக அது தடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆதார் சரிபார்ப்புடன் சில ரயில்களில் ஒடிபி சரிபார்ப்பும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Only Aadhaar-verified users can book rly tickets on 1st day of advance reservation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.