IANS
இந்தியா

ஓடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை: சாலையில் தூக்கி வீசிய கொடூரம்; ஹரியாணாவில் இருவா் கைது

ஹரியாணாவில் ஓடும் காரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திருமணமான 25 வயது பெண், சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஹரியாணாவில் ஓடும் காரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திருமணமான 25 வயது பெண், சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவத்தில் தொடா்புடைய 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக ஃபரீதாபாத் காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் யாஷ்பால் யாதவ் புதன்கிழமை கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண், கணவா் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருடைய பெற்றோருடன் வசித்து வருகிறாா். செக்டாா் 30-இல் உள்ள அவரது நண்பா் வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை மாலை சென்ற அவா், வீடு திரும்புவதற்காகச் சாலையில் காத்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு காரில் வந்த நபா்கள் அவருடைய இடத்தில் சென்றுவிடுவதாகத் தெரிவித்தனா். அந்தப் பெண் வாகனத்தில் ஏறிய நிலையில், அவா் செல்லவேண்டிய இடத்துக்குப் பதிலாக காா் குருகிராம் நோக்கிச் சென்றது. அப்போது, காரில் வைத்து அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்.

இரவு முழுவதும் காரில் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண், ராஜா செளக் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் சாலையில் தூக்கிவீசப்பட்டாா். இதில், அவருடைய முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

கைப்பேசியில் அவருடைய சகோதரியிடம் நடந்த சம்பவத்தை அந்தப் பெண் தெரிவித்தாா். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அவரது சகோதரி, பாட்ஷா கான் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றாா். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், தில்லிக்கு அழைத்துச் செல்லுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இருப்பினும், ஃபரீதாபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அவா் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை.

இந்தச் சம்பவம் தொடா்பாக இருவரை ஃபரீதாபாத் காவல் துறை கைது செய்துள்ளது. அவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா். மற்றொருவா் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா். இருவரும் ஃபரீதாபாதில் வசித்து வருகின்றனா்.

அடையாள அணிவகுப்பு சோதனை நடத்தப்பட்ட பிறகு அந்த நபா்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT