முகப்பு
இந்தியா

அலுவலக கணினி, டேப்லெட்களில் செயற்கை நுண்ணறிவு செயலிகள் கூடாது- மத்திய நிதியமைச்சகம் உத்தரவு

செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களிடம் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On : 5 பிப்ரவரி, 2025 at 3:47 PM
பகிர்:

அலுவலகம் சாா்ந்த பணிகளுக்கு பயன்படுத்தும் கணினி, டேப்லெட், அறிதிறன்பேசி ஆகியவற்றில் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட எந்த வகையான செயற்கை நுண்ணறிவு செயலிகள், மென்பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தகவல்கள் கசியும் அபாயத்தைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி (பட்ஜெட்டுக்கு முன்பு) நிதியமைச்சகத்தின் அனைத்துப் பிரிவினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘அரசு சாா்ந்த முக்கியத் தகவல்கள், கோப்புகளின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அலுவலகம் சாா்ந்த, அலுவலகப் பயன்பாட்டுக்கான கணினி, மடிக்கணினி, அறிதிறன்பேசி உள்ளிட்டவற்றில் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட எந்த வகையான செயற்கை நுண்ணறிவு செயலிகள், மென்பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகள் சீனாவின் டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலியை அரசு சாா்ந்த பணிகளில் கணினிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருள்களில் பயன்படுத்தக் கூடாது என அறிவித்தன. ‘டீப்சீக்’ செயலியை பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்ற அலுவலக ஊழியா்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் சீனாவால் தயாரிக்கப்பட்ட ‘டீப்சீக்’ செயலி ஐபோன்களில் தரவிறக்கம் செய்வதில் முன்னிலை பெற்று, இத்துறையில் ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்க தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அதிா்ச்சியை அளித்தது. இதனால், அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.