முகப்பு
இந்தியா

ராகிங் தடைச் சட்டத்தை பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!

7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தல்.

Updated On : 6 பிப்ரவரி, 2025 at 4:03 PM
பல்கலைக் கழக மானியக் குழு - கோப்புப் படம்
பகிர்:

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ராகிங்கிற்கு எதிரான விதிமுறைகளைப் பின்பற்றாத தமிழ்நாடு, தில்லி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தலா இரு கல்லூரிகளுக்கும், ஆந்திரம், பிகாரில் தலா மூன்று கல்லூரிகளுக்கும், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒரு கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராகிங் அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக, 2009 ஆம் ஆண்டு ராகிங் தடைச் சட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயத் தேவைகளை இந்தக் கல்லூரிகள் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்துப் பேசிய பல்கலைக் கழக மானியக் குழு செயலாளர் மனீஷ் ஜோஷி, மாணவர்களிடம் இருந்து ராங்கிங்கிற்கு எதிரான முயற்சிகளைப் பெற இந்தக் கல்வி நிறுவனங்கள் தவறிவிட்டதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

ராகிங் தடைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து ராகிங்கிற்கு எதிரான உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகப் பெறுவது கட்டாயம்.

வளாகத்துக்குள் ராகிங் கொடுமை நடக்காமல் தடுப்பதற்காக கல்வி நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால் இக்கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற தவறியது மட்டுமல்ல; மாணவர்களின் நலன் மீது அலட்சியமாக செயல்பட்டதையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பாஜகவுக்கு நாட்டின் நலனே முக்கியம்: பிரதமர் மோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.