பாலிவுட் இசையமைப்பாளர் அலுவலகத்தில் ரூ.40 லட்சம் திருட்டு
பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீதம் அலுவலகத்தில் ரூ.40 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தியின் மும்பை அலுவலகத்தில் ரூ.40 லட்சம் திருடப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மலாட் காவல் நிலையத்தில் ப்ரீதமின் மேலாளர் வினீத் ஷீடா அளித்த புகாரின்படி, பணி நோக்கங்களுக்காக பணம் சில நாள்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வினீத் அந்தத் தொகையைப் பெற்று அலுவலகத்தில் வைத்திருந்தார். அப்போது அங்கு ஆஷிஷ் சயல் என்ற ஊழியர் இருந்தார்.
மேலாளர் பின்னர் சில ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக ப்ரீதம் வீட்டிற்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் வைத்திருந்த பை காணாமல் போனது தெரியவந்தது.
கொசோவோ நாட்டில் புதிய நாடாளுமன்றத் தேர்தல்!
ப்ரீதம் வீட்டிற்கு டெலிவரி செய்வதாகக் கூறி, சயல் பையை எடுத்துச் சென்றதாக மற்ற அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
எனினும் சயலை, வினீத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவர், சயலின் வீட்டிற்குச் சென்றார்.
ஆனால் அவரைக் காணவில்லை. இதையடுத்து, மலாட் காவல் நிலையத்தில் வினீத் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.