நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளர் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல்!
நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளர் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பங்கேற்க பொறியாளா் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு 2 நாள்கள் பரோல் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரோல் வழங்கக் கோரி ரஷீத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி விகாஸ் மஹாஜன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாத சம்பவங்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் ரஷீத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2019-இல் கைது செய்தனர். அதன்பிறகு அவா் தில்லி திகாா் திறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
பொறியாளரான ரஷீத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எம்.பி.யாக பதவியேற்பதற்காக பரோலில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க 2 நாள்கள் பரோல் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விகாஸ் மஹாஜன், என்ஐஏ தரப்பு வாதங்களைக் கேட்டறிந்தார்.
ரஷீத்துக்கு பரோல் வழங்கக் கூடாது என்றும், அவர் நாடாளுமன்றத்தில் சென்று பங்கேற்பதற்கு குறிப்பிட்டு எந்தவொரு காரணத்தையும் சுட்டிக்காட்டவில்லை எனவும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காரணமாகக் குறிப்பிட்டு பரோலுக்கு எதிராக என்ஐஏ வாதிட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ரஷீத்துக்கு 2 நாள்கள் காவலுடன் கூடிய பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | நொய்டாவில் ரூ.30 கோடிக்கு வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி!