கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!
கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலியானது பற்றி...
மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!
இந்த நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர பக்தர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, தவறான வழியில் எதிரே வந்த லாரி மோதியதில் திங்கள்கிழமை காலை விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு விபத்து, மைஹார் மாவட்டம் அருகே சென்றுகொண்டிருந்த கார் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இந்த காரில் மகா கும்பமேளாவில் இருந்து சொந்த ஊரான இந்தூரை நோக்கி 7 பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். காயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.