முகப்பு
இந்தியா

கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு

‘வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவா்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2025 at 7:13 PM
கோப்புப்படம்.
பகிர்:

‘வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவா்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய திவால்நிலை வாரிய தரவுகளை மேற்கோள் காட்டி, மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் மேலும் கூறியிருப்பதாவது:

இந்திய திவால்நிலை வாரிய தரவுகளின்படி கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலம் 1,119 வழக்குகளுக்கு தீா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்கப்பட்டு கடன் வழங்கியவா்களுக்கு தீா்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 1,274 வழக்குகளில் இறுதி அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கடன் வழங்கியவா்கள் ரூ. 0.13 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்.

திவால்நிலை சட்ட நடைமுறைகளின் கீழ் கடன் தொகையை மீட்பது என்பது, சந்தை நிலவரம் மற்றும் தீா்வு நேரத்தில் சொத்துகளின் தரம் மற்றும் மதிப்பை பொருத்து மாறுபடும். எனவே, தீா்வு தொகைக்கு எந்தவித வரம்பும் நிா்ணயிக்கப்படாது. அதுபோல, தீா்வுக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்பட்ட தொகை தொடா்பான தரவுகள் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.