முகப்பு
இந்தியா

வழிபாட்டுத் தலங்கள் வழக்கு மார்ச் மாதம் விசாரணை: உச்சநீதிமன்றம்

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு பற்றி..

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 7:39 AM
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
பகிர்:

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு வருகின்ற மார்ச் மாதம் மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த வழக்கில் புதிதாக பல்வேறு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஜாமா மசூதி ஆகியவை தொன்மையான ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று ஹிந்துக்கள் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Advertisement

வழிபாட்டுத் தலங்கள் - 1991 சட்டத்தை மேற்கோள்காட்டி, இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று முஸ்லிம் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. ஏனெனில், நாடு சுதந்திரமடைந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நிலவிய வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையின் மாற்றத்தை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது. மேலும், மதத் தன்மையைப் பராமரிப்பதற்கான உரிமைகளை வழங்குகிறது.

இந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் 2, 3 மற்றும் 4 பிரிவுகளை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு, பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு உள்பட 6 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ”1991-வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லத்தக்க தன்மையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பிற நீதிமன்றங்கள் இந்த விவகாரம் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் மசூதியில் ஆய்வுக்கான இடைக்கால உத்தரவு அல்லது இறுதி உத்தரவு உள்பட எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் பல அமைப்புகள் புதிதாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அனைத்தையும் ஒன்றிணைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது, மனுக்களை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது, பல இடைக்கால விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இவற்றை பரிசீலனை செய்யாமல் போக வாய்ப்புள்ளது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் தொடர்புடைய வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்படுவதால், மார்ச் மாதத்தில் வழக்கின் விசாரணைக்கு தேதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments