கும்பமேளா பலி: உ.பி. சட்டப்பேரவை முன் சமாஜவாதி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்!
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப். 18) தொடங்கியுள்ள நிலையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உத்தரப் பிரதேச அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப். 18) தொடங்கியுள்ள நிலையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்த உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தில் தவறுகள் இருந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் மேலும் இறப்பு எண்ணிக்கையைக்கூட அரசு வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும் தினமும் எத்தனை பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள் என்று கூறும் அரசு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட ஏன் மறுக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினர்.