எச்எம்பிவி: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கேஜரிவால் வலியுறுத்தல்!
தொற்றை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும்..
சீனாவில் புதிதாக பரவியுள்ள எச்எம்பிவி தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் மக்களை அச்சுறுத்தி வரும் எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் காய்ச்சலால் கடந்த சில நாள்களாக அங்குள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் பெங்களூருவில் இரண்டு பேருக்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கரோனா தொற்று பாதிப்பு நாட்டையே உலுக்கியது. எனவே எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கட்டுப்படுத்துவது அவசியம். அதேசமயம் நிலைமையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும்.
பெங்களூருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாத பெண் பச்சிளம் குழந்தையும், எட்டு மாத ஆண்டு குழந்தையும் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 மாதக் குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்டிபியதாகவும், 8 மாத ஆண் குழந்தை சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் சர்வதேச பயணம் மேற்கொண்ட வரலாறும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எச்எம்பிவி ஏற்கனவே இந்தியா உள்பட உலகளவில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
எனவே, எச்எம்பிவி தொற்று மேலும் பரவாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, தில்லியின் சுகாதாரத் துறை சுவாச நோய்களால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மருத்துவமனைகளுக்கு ஆலோசனையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.