நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!
மும்பையில் பிரபல நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.
மும்பையில் பிரபல நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார்.
நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில், மர்மநபர் ஒருவர் அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில், சைஃப் அலிகான் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
2012 ஆம் ஆண்டு பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்த சைஃப் அலிகான் மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு ஷரண் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தைமூர், ஜெஹ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ஹிந்தி திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் 1993 ஆன் ஆண்டில் பரம்பரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தில் சாத்தா ஹை, ஓம்காரா, தானாஜி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சைஃப் அலி கான் கடைசியாக தேவரா படத்தில் நடித்துள்ளார்.
சைஃப் அலிகான் காயமடைந்தது பற்றி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளையனுடன் ஏற்பட்ட மோதலில் அவர் கத்தியால் குத்தப்பட்டாரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
லீலாவதி மருத்துவமனையின் டாக்டர் நிரஜ் உத்தாமணி கூறுகையில், “காயமடைந்த சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு 6 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் முதுகில் கத்திக்குத்து விழுத்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான் பாதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்” என்றார்.
ஏற்கனவே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி பாந்த்ராவில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை, பிரபல கொள்ளைக் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
அதன்பின்னர், நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தத் தாக்குதல் சம்பவம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.