முகப்பு
இந்தியா

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன: காங்கிரஸ்

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Updated On : 20 ஜனவரி, 2025 at 8:12 AM
பகிர்:

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதற்கேற்ப கூடுதல் பேராசிரியர்களையும் நியமிக்கும் விதமாக மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் தளர்த்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் குறைந்தது நான்கு ஆண்டுகள் மருத்துவ நிபுணர்களாக இருந்தவர்கள் உதவிப் பேராசிரியராகலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆலோசகர், நிபுணர் அல்லது மருத்துவ அதிகாரி, மருத்துவக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியராகலாம்.

உதவிப் பேராசிரியராக 4 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்திருந்தால்தான் பேராசிரியராக ஆக முடியும் என்ற பழைய விதி திருத்தப்பட்டு தற்போது 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளே இருந்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்,

'முதலாவதாக, நீட் தேர்வு மூலமாக முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் சதவீதத்தை மோடி அரசு குறைக்கிறது.

இப்போது மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்துகிறது.

தரமான மருத்துவக் கல்வி என்ற நோக்கத்துடன் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு 2020 செப்டம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது தேசிய மருத்துவ ஆணையம் எடுக்கும் சில நடவடிக்கைகள் குழப்பத்தைத் தருகின்றன' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.