முகப்பு
இந்தியா

குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!

பிகாரில் மாணவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்ற குரங்கு...

Updated On : 26 ஜனவரி 2025, 9:56 pm IST
குரங்கு (கோப்புப் படம்)
பகிர்:

பிகாரில் குரங்கு ஒன்று மாடியில் இருந்து தள்ளிவிட்டதால் கீழே விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள மகர் கிராமத்தில் வசித்து வந்த மாணவி பிரியா குமாரி. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவர், தனது வீட்டின் மாடியில் அமர்ந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கு படித்து வந்தார்.

திடீரென அவர் வீட்டின் மாடிக்கு வந்த குரங்குகள் கூட்டம் அவரை சுற்றி வளைத்துள்ளது. தனியாக இருந்ததால் குரங்குகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா குரங்குகளிடமிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஆனால், ஒரு குரங்கு அவரைப் பிடித்து இழுத்தது. பிரியாவின் அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டினர் குரங்குகளை விரட்ட முயற்சித்தனர்.

அவர்களைப் பார்த்து சில குரங்குகள் திசை திரும்பியதால் மாணவி மாடிப்படிகள் இருக்கும் பகுதிக்கு தப்பியோடினார்.

ஆனால், ஒரு குரங்கு மாணவியின் மீது ஏறி அவரை மாடியில் இருந்து கீழே தள்ளியது. இதனால், படுகாயமடைந்த மாணவிக்கு தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டது. அவர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பிரியா ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் புகாரளிக்கவும் முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்குகள் தொல்லை குறித்து தொடர்ந்து புகாரளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.