குடியரசுத் தலைவர் குறித்த சோனியா காந்தியின் கருத்தால் பாஜக கொந்தளிப்பு!
குடியரசுத் தலைவர் சோர்வாக இருந்ததாக சோனியா காந்தி கூறியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் சோர்வாக இருந்ததாக சோனியா காந்தி கூறியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று(ஜன. 31) தொடங்கியது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும்வகையில் சோனியா காந்தி ``குடியரசுத் தலைவர் இறுதியில் மிகவும் சோர்வாக இருந்தார். அவரால் பேச முடியவில்லை; மோசமான விஷயம்’’ என்று கூறினார்.
Advertisement
Advertisement
குடியரசுத் தலைவர் சோர்வாக இருந்ததாகவும், இது மோசமான விஷயம் என்றும் சோனியா காந்தி கூறியது பாஜகவினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், குடியரசுத் தலைவர் உரை குறித்த சோனியா காந்தியின் கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் பாஜகவினர் கூறினர்.
இதையும் படிக்க: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரை குறித்த சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
சோனியா காந்தியின் விமர்சனம் குறித்து ``குடியரசுத் தலைவர் உரை குறித்த சோனியா காந்தியின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் கண்ணியத்தைக் சீர்குலைக்கும்வகையில் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம், விவசாயிகள், பெண்கள் குறித்து பேசும்போது ஒருபோதும் சோர்வு ஏற்படாது’’ என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ``குடியரசுத் தலைவர் குறித்த கேள்வியில் சோனியா காந்தி `மோசமான விஷயம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது, குறிப்பிடத்தக்க அவமதிப்பையும் மற்றும் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது’’ என்று கூறினார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறியதாவது, சோனியா காந்தியின் கருத்து காங்கிரஸின் தாழ்ந்த அரசியல் பண்பைக் காட்டுகிறது. அவர்களின் (காந்தி) குடும்பத்தில் அல்லாத ஒருவர் உயர் பதவிகளை வகிப்பதை, அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. குடியரசுத் தலைவர் மீதான இந்த அவமதிப்பு, ஒவ்வொரு பழங்குடியினருக்கும் உண்டான அவமதிப்பு; ஒவ்வோர் இந்தியருக்கும் உண்டான அவமானம், ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டான அவமதிப்பு’’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.