சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!
பிகாரிலுள்ள சீதையின் கோயில் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள, சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், புனௌரா தாம் ஜானகி கோயில் உள்ளிட்ட புனித தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, இன்று (ஜூலை 1) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் நிதிஷ் குமார், புனௌரா தாம்மில் பிரம்மாண்ட கோயிலும், மற்ற கட்டமைப்புகளுக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், பிகாரின் சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.137 கோடி செலவில் பழைய புனௌரா தாம் ஜானகி கோயில் புதுப்பிக்கப்படும் எனவும், ரூ.728 கோடி செலவில் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள தொகை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியை நிர்வாகிக்கப் பயன்படுத்தப்பட்டு, கோயிலை இணைக்கும் அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தப் புதிய கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள நிலையில், பிகாரில் இந்தாண்டு (2025) இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Bihar Cabinet approves Rs 883 crore for development of Sita's birthplace!
இதையும் படிக்க: டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட்டி!