
கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து துணை முதல்வர் சிவக்குமாரின் ஆதரவாளரும் ராமநகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.
இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அக்கட்சி நிர்வாகிகளுக்குள் எழுந்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்தராமையாவும், சிவக்குமாரும் நேற்று ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சித்தராமையா, எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, நாங்கள்(சிவகுமாரும் - சித்தராமையாவும்) ஒற்றுமையாகவே இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இக்பால் உசேன் கருத்து
கர்நாடக எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்தித்து கருத்துகளை பெற கட்சி மேலிடம் சார்பில் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பெங்களூரில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய இக்பால் உசேன், “கர்நாடக முதல்வரை மாற்றவில்லை என்றால், 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. 137 எம்எல்ஏக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் சிவக்குமாருக்கே ஆதரவாக இருக்கின்றனர். அவரை முதல்வராக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுர்ஜேவாலாவை சந்திக்கும் எம்எல்ஏக்கள் பலரும் சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்வதாக கூறப்படுகிறது.
An interview given by Deputy Chief Minister Shivakumar's supporter and Ramanagara MLA Iqbal Hussain regarding the change of Karnataka Chief Minister has created a stir.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.