ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யாவின் சிலை திறப்பு!
ஹைதராபாத்தில் மறைந்த முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் சிலை திறக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கொனிஜேட்டி ரோசய்யாவின் சிலையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.
ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கொனிஜேட்டி ரோசய்யாவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்த நாளை மாநிலம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் லக்டி கா புல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவச் சிலையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமர்கா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ரோசய்யாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.
இதேபோல், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் வொய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் ரோசய்யாவுக்கு மரியாதைச் செலுத்தியுள்ளனர்.
முன்னதாக, சுமார் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் சர்ச்சைகள் அற்ற தலைவராகக் கருதப்படும் ரோசய்யா தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.