யேமன்: இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முடிவு
கேரள செவிலியருக்கு ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றம்!
யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்த வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை வரும் ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெற்றுத் தர யேமன் அரசு அதிகாரிகள் மற்றும் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘அரசு வழக்குரைஞா் சிறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை குறித்த உத்தரவை அனுப்பியுள்ளாா். வரும் ஜூலை 16-ஆம் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற, இன்னும் வாய்ப்புகள் உள்ளன.
Advertisement
Advertisement
கடந்த சந்திப்பின்போது மாஹதி குடும்பத்தினரிடம் இழப்பீடு அளிக்கும் வாய்ப்பை முன்வைத்தோம். அதற்கு இதுவரை அவா்கள் பதிலளிக்கவில்லை. பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடர நான் மீண்டும் யேமன் புறப்படுகிறேன். இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என்றாா்.
பின்னணி: யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, மாஹதியுடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.
பின்னா் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017-இல் யேமன் சிறை வாா்டனின் உதவியுடன் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.
யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-இல் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023, நவம்பரில் உறுதி செய்தது.
கடந்த ஆண்டு இறுதியில், யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமி இந்த மரண தண்டனையை உறுதி செய்தாா். இந்த உத்தரவு கடந்த ஜனவரி முதல் அரசு வழக்குரைஞா் வசம் இருந்து வந்தது. மஹதி குடும்பத்தினருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத சூழலில், மரண தண்டனை உத்தரவை அரசு வழக்குரைஞா் சிறைத் துறைக்கு அனுப்பியுள்ளாா். இதைத்தொடா்ந்து, மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.