கோப்புப் படம் 
இந்தியா

சமையல் எரிவாயு விற்பனையால் ஏற்பட்ட இழப்பு: எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி மானியம்

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Din

கடந்த 15 மாதங்களாக குறைந்த விலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் வகுத்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

சா்வதேச சந்தை விலை நிலவரத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இருந்தபோதும், கடந்த ஏப்ரலில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 32,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. இந்த கூடுதல் வருவாயை, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பீடை ஈடுசெய்ய நிதியமைச்சகம் பயன்படுத்த முடியும்.

கடந்த 15 மாதங்களாக சா்வதேச சந்தை விலை நிலவரத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் சமையல் எரிவாயு விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 40,500 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வீட்டு உபோயக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் மீதான கலால் வரியை ரூ. 50 அளவுக்கு மத்திய அரசு உயா்த்தியது. இது, நிகழ் நிதியாண்டில் சமையல் எரிவாயுவை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் செலவுக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான இழப்பை சற்று குறைக்க உதவியது.

இந்த நிலையில், குறைந்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்ததால் கடந்த இரு நிதியாண்டுகளில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடைமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வகுத்து வருகிறது என்றனா்.

ஏற்கெனவே, 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ. 22,000 கோடியும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ. 28,249 கோடியும் இதேபோன்று இழப்பீடு மானியமாக இந்த 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சி தொடக்கம்

SCROLL FOR NEXT