மதசார்பற்ற சக்திகளை ராகுல் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது: ஜான் பிரிட்டாஸ்
ராகுல் குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்கக்கூடாது..
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஒரே நோக்கம் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்கக்கூடாது என்று சிபிஐ(எம்) தலைவர் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியானது ராஷ்ட்ரிய சுயம்சேவக்(ஆர்எஸ்எஸ்) உடன் சமன் செய்த காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களுக்கு பிரிட்டாஸ் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கேரளத்துக்குச் செல்லும் போதெல்லாம் இதுபோன்ற அபத்தான விஷயங்களைப் பேசுவது ராகுலின் பழக்கம். அதற்குக் கேரள காங்கிரஸ் கட்சிதான் காரணம். ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்கொள்ள அவர் கேரளத்தைப் போர்க்களமாகத் தேர்ந்தெடுத்தார். அங்கு இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான சண்டை நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் போன்ற தலைவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளின் அணியினரிடையே குழப்பத்தையும், பிளவுகளையும் உருவாக்குவதற்குப் பதிலாக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதே அவரது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ்-ஐ எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சிபிஐ(எம்)க்கு அவர் பாடம் கற்பிக்கத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
கேரளத்தின் கோட்டயத்தில் பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஐ(எம்) உடன் சித்தாந்த ரீதியாகப் போராடுவதாகக் கூறினார், ஆனால் அவர்களைப் பற்றிய அவரது மிகப்பெரிய புகார், மக்கள் மீது அவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை என்பதுதான் என்று அவர் பேசினார்.