தவறான விடியோக்கள்: 25 செயலிகள், இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ள 25 செயலிகள், இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு.
தவறான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 25 செயலிகள், இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இணையதளம், செயலிகளை இந்தியாவில் மக்கள் பார்க்காத வகையில் தடை செய்யுமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சட்ட விவகாரத் துறை, தொழில்துறை அமைப்புகள் இணைந்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இது குறித்து வெளியான தகவலில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையானது, 25 இணையதள இணைப்புகளில், பாலியல் விடியோ உள்ளிட்ட தவறான விளம்பரங்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டுபிடித்த நிலையில், அவற்றை தடை டெசய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றில் ஏல்டிடி, யுஎல்எல்யு, பிக் ஷாட்ஸ் செயலி, டெசிஃபிளிக்ஸ், பூமெக்ஸ், நவரச லைட், குலாப் செயலி, கங்கன் செயலி, புல் செயலி, ஜால்வா செயலி, வாவ் என்டர்டெயின்மென்ட், லூக் என்டர்டெயின்மென்ட், ஷோஎக்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
தகவல் மற்றும் ஒளிபரப்புச் சட்டத்தை மீறி இந்த இணையதளங்கள், செயலிகள் செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன்படி, இதுபோன்ற இணையதளங்களை முடக்குவது அல்லது நீக்குவதற்கு இடைத்தொடர்பாளர்களே பொறுப்பு. இதுபோன்ற சட்டத்தை மீறி செயல்படும் இணையதளங்களை நீக்குவது அல்லது முடக்குவதை மேற்கொள்ளாத இடைத்தொடர்பாளர்கள், இந்த விடியோக்களுக்குப் பொறுப்பாவதிலிருந்து விலக்குப் பெறும் உரிமையை இழந்துவிடுவார்கள். குறிப்பாக, உரிய அரசிடமிருந்து முடக்குமாறு அறிக்கை வந்தபிறகு, இது முழுக்க முழுக்க இடைத்தொடர்பார்களின் பொறுப்பாக இருக்கிறது.
சூதாட்ட இணையதளங்கள்
2022 முதல் 2025 ஜூன் வரை நாட்டில் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வந்த 1,524 சூதாட்ட இணையதளங்களும், செல்போன் செயலிகளும் முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில், மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்திருந்தது.