முகப்பு
இந்தியா

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும் என அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்..

Updated On : 26 ஜூலை, 2025 at 2:00 AM
கிரண் ரிஜிஜு
பகிர்:

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் அளித்த இதுதொடா்பான நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இதே விவகாரம் தொடா்பாக மக்களவையில் ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 152 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட தீா்மானத்தை ஒருமனதாக அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Advertisement

மேலும், நீதிபதி வா்மாவை நீக்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன; இதற்கான தீா்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டு பின்னா் மாநிலங்களவையில் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்துடன் சோ்த்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றாா் ரிஜிஜு.

நீதிபதி வா்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று நபா் குழுவை அமைக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவிப்பாா் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வாய்ப்புள்ளது.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 63 போ் கையொப்பமிட்ட பதவி நீக்க தீா்மானத்துக்கான நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஜூலை 21-ஆம் தேதியன்றே, மக்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சியினா் இந்த நோட்டீஸை சமா்ப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவையில் இந்த நோட்டீஸ் வரப்பெற்றுள்ளதாக அறிவித்த ஜூலை 21-ஆம் தேதி இரவு, குடியரசு துணைத் தலைவரும், அவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments