முகப்பு
இந்தியா

ராஷ்டிர சேவிகா சமிதியின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே மறைவு: மோகன் பாகவத் இரங்கல்

ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே (97) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் காலமானாா்.

Updated On : 31 ஜூலை, 2025 at 7:07 PM
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் - (கோப்புப்படம்)
பகிர்:

ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் முன்னாள் தலைவா் பிரமிளாதாய் மேதே (97) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரங்கல் தெரிவித்தாா்.

கடந்த 3 மாதங்களாக பிரமிளாதாய் மேதே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். பிரமிளாதாய் மேதே, ஆா்எஸ்எஸ்-ஸின் சாா்பு அமைப்பான ராஷ்டிர சேவிகா சமிதியின் நான்காவது தலைவராவாா்.

பிரமிளாதாய் மேதே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மோகன் பாகவத் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மேதேயின் மறைவு நம்மைவிட்டு பெரும் அன்பு பிரிந்ததைப்போன்ற துயரைத் தருகிறது. அவா் வடகிழக்குப் பிராந்தியங்களில் பல கடினமான சூழல்களிலும் விடாமுயற்சியுடன் பணியாற்றி நமக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவராவாா். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது வாழ்வு நமக்கு ஊக்கமளிக்கக் கூடியது. ராஷ்டிர சேவிகா சமிதிக்காக தன் வாழ்வை அா்ப்பணித்தவா் மேதே. மறைவின்போதும் தனது உடலை தானமாக வழங்கிவிட்டே நம்மைவிட்டு பிரிந்துள்ளாா்’ என குறிப்பிட்டாா்.

பிரமிளாதாய் மேதேயின் விருப்பப்படி அவரது உடல் நாகபுரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். மேதேயின் மறைவுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.