முகப்பு
இந்தியா

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

இந்தியா - அமெரிக்கா இடையே பிரச்னை ஏற்படலாம் என்று தில்லி சிந்தனைக் குழு கணித்திருந்தது உண்மையாகி விடும்போல..

Updated On : 31 ஜூலை 2025, 6:07 pm IST
பகிர்:

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் சரி - எப்போதும் மெச்சி வந்தனர். அதன் விளைவாகவோ என்னவோ, அவர்கள் இருவரின் உறவில் தற்போது விரிசல் விழுந்தாகிவிட்டது.

ஆனால், இருவரும் நல்ல நட்புறவில் இருந்தபோதே, அது எப்போதும் நிலைக்காது என்று சிலர் கணித்துக் கூறியிருந்தனர். எதிர்பாராதவிதமாகவா என்னவென்று தெரியவில்லை; நடந்தேறி விட்டது.

டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் சுமார் 50,000 பேர் கொண்ட ஒரு நிகழ்வில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் போப்பை தவிர வேறு எந்தவொரு வெளிநாட்டுத் தலைவருக்கும் இவ்வாறான நிகழ்வு நடத்தப்பட்டதில்லை.

Advertisement

Advertisement

அதற்கு அடுத்த ஆண்டே 2020-ல் குஜராத்தில் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், மோடி தனது நண்பர் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் தேர்தலும் வந்துசேர்ந்தது. தான் அதிபரானால், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்துவேன் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.

டிரம்ப்பின் இந்த வாக்குறுதியை வைத்துத்தான், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படும் என்று தில்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழு மையம் (Delhi-based Ananta Aspen Centre think-tank) ஒன்று தெரிவித்தது.

ஏனெனில், இந்தியர்கள் பல்லாயிரக்கணக்கானோரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். டிரம்ப்பின் வாக்குறுதிப்படியே, சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு, கால்கள் கட்டப்பட்டு குறிப்பிடத்தக்க அவமரியாதையுடன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். இதன்போத, ஆரம்பித்ததுதான், இந்தியா - அமெரிக்கா விரிசல் எனலாம்.

ஆனால், அதன் பின்னர் வரிவிதிப்பு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருள்கள் மீதான தடை உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே செழுமையான விரிசல் ஏற்பட்டது.

2023 - 24 நிதியாண்டில் 30 பில்லியன் டாலருடன், அமெரிக்காவின் வர்த்தகத்தில் பெரியளவிலான பங்களிப்பை இந்தியா கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான், இந்தியா மீதான வரி பிரச்னையைக் கொண்டு, இந்தியாவை `செத்த பொருளாதாரம்’ என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அமைதிகாத்துவரும் ஆளும் அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, டிரம்ப்புடனான மோடியின் நட்புறவால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று சமூக ஊடகங்களில் கருத்துகளும் விமர்சனங்களும் உலவுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.