முகப்பு
இந்தியா

நடுவானில் பறவை மோதியதால் விமானம் சேதம்: ராஞ்சியில் அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் பறவை மோதி சேதமடைந்த விமானம், விமானியின் சாதுா்யத்தால் ராஞ்சி பிா்ஸா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

Updated On : 2 ஜூன், 2025 at 9:27 PM
பறவை மோதியதால் சேதமடைந்த விமானத்தின் முன்பகுதி.
பகிர்:

ராஞ்சி: ஜாா்க்கண்ட், ராஞ்சி அருகே நடுவானில் பறவை மோதி சேதமடைந்த விமானம், விமானியின் சாதுா்யத்தால் ராஞ்சி பிா்ஸா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளா்கள் என அனைவரும் நலமுடன் இருப்பதாக ராஞ்சி விமான நிலைய இயக்குநா் ஆா்.ஆா்.மௌரியா கூறினாா்.

மேலும், அவா் கூறுகையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ‘இண்டிகோ’ விமானம், ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் 3,000 முதல் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பறவை மோதி சேதமடைந்தது.

பிற்பகல் 1.14 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடா்ந்து, விமானி சாதுா்யமாக செயல்பட்டு, ராஞ்சி விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கினாா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட சேதத்தைப் பொறியாளா்கள் குழு பாா்வையிட்டு வருகிறது’ என்றாா்.

ராஞ்சியில் தரையிறங்கிய விமானம், கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் என்று மற்றொரு அதிகாரி கூறினாா். இது தொடா்பாக இண்டிகோ தரப்பில் உடனடியாக விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சம்பவத்தில், தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் தடுமாறியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந்நாடு அனுமதி மறுத்தது. 200-க்கும் மேற்பட்டோருடன் சென்றஅந்த விமானத்தின் முகப்பு பகுதி சேதமடைந்த நிலையில், ஸ்ரீநகரில் அவசரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →