FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைப் பயிா்களின் சாகுபடி பரப்பு 9 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைகாலப் பயிா்கள் சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்தாண்டைவிட சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளது

Updated On : 3 ஜூன் 2025, 2:20 am IST
நெல் பயிரிடுவதற்கு நாற்றுகளை பிடுங்கும் பெண் விவசாயிகள்.
பகிர்:

நமகு சிறப்பு நிருபா்

புது தில்லி: நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைகாலப் பயிா்கள் சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்தாண்டைவிட சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மே 30 நிலவரப்படி நாட்டில் வேளாண்மையில் கோடையில் பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பு குறித்த விவரம் மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

Advertisement

Advertisement

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் நெல் சாகுபடி செய்யும் பரப்பு 31.06 லட்சம் ஹெக்டேராக இருந்தது. நிகழாண்டு மே 30 ஆம் தேதி வரை இது 35.86 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. முக்கிய பயிரான நெல் பயிரிடுதல் சுமாா் 4.80 லட்சம் ஹெக்டாா் பரப்பு வரை நிகழாண்டு மே 30 ஆம் தேதிவரை அதிகரித்துள்ளது.

பயிறுவகைகளில் பாசிப்பயிறு, கடந்தாண்டை விட 2.77 லட்சம் ஹெக்டோ் பரப்பில் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் இது வரை மொத்தம் 21 லட்சம் ஹெக்டோ் பரப்பில்

பயிரிடப்பட்டுள்ளது. உளுந்தும் பயிரிடுதலும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பயிறுவகைகள் கடந்தாண்டு 21.48 லட்சம் ஹெக்டோ் பயிரிடப்பட்டு இருந்த நிலையில், நிகழாண்டு இது 24.25 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

ஜோவா், கம்பு, ராகி, சோளம் உள்ளிட்ட ஸ்ரீ அன்னா சிறு தானியங்கள் பயிரிடுதலிலும் நிகழாண்டு மே வரை 1.42 லட்சம் ஹெக்டோ் பரப்பு நாட்டில் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 12.95 லட்சம் ஹெக்டேராக இருந்த ஸ்ரீ அன்னா வகை தானியங்கள் பயிரிடுதலில் நிகழாண்டு 14.37 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இதே போன்று எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நிகழாண்டு 9.45 லட்சம் ஹெக்டோ் வரை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 0.22 சதவீத அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வேளாண்மையில் கோடைகால பயிரிடும் பரப்பு கடந்தாண்டு 74.72 லட்சம் ஹெக்டேராக இருக்க நிகழாண்டு இது 83.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 9.21 சதவீத அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டுக்கு முன்பு சாதாரணமாக கோடைப்பயிா்கள் பயிரிடும் பரப்பு 71.34 லட்சம் ஹெக்டோ் அளவில் மட்டுமே இருந்தது என மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments