வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
வெளிநாடு சென்ற எம்பிக்கள் பிரதமர் மோடியுடன் சந்தித்ததைப் பற்றி...
வெளிநாடு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துவருவதை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், எம்.பிக்கள் குழு 33 நாடுகளுக்குச் சென்றுள்ளது.
அங்கு அந்த நாட்டு மூத்த அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விளக்கி வருகின்றனர்.
Advertisement
இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சசி தரூர் (இந்திய தேசிய காங்கிரஸ்), ரவிசங்கர் பிரசாத் (பாஜக), சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்), பைஜயந்த் பாண்டா (பாஜக), கனிமொழி (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
புதுதில்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று(ஜூன் 10) இரவு 7 மணியளவில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அதன்படி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து எம்பிக்கள் ரேகா சர்மா, பாஜகவின் ஃபாங்னான் கோன்யாக்,ரவிசங்கர் பிரசாத், அதிமுகவின் தம்பிதுரை, பிஜு ஜனதா தளத்தின் சஸ்மித் பத்ரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் உயர் நிலை சந்திப்புகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள், பல்வேறு நாடுகள் தெரிவித்த ஆதரவுகள், நாடுகளுக்கு இடையேயான செயல்திட்ட வியூகங்களின் முடிவுகள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் விவாதிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!