தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!
ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக இடைவெளி எடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் ஆட்டத்தைத் துவங்கியுள்ளது.
Advertisement
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் வரும் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானாவின் ஹைதராபாத் நகரத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், அந்நகரத்தின் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வெளியான விடியோ மற்றும் புகைப்படங்களில் ஹைதராபாத்தின் சாலைகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரில் மக்கள் வாகனங்களைத் தள்ளியபடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இத்துடன், ஹைதராபாத்தின் சந்தோஷ் நகர் மற்றும் சம்பாபேட் ஆகிய இடங்களில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆந்திர மருத்துவ ஆலையில் விபத்து! 2 தொழிலாளிகள் பலி!