அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா
அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா வலியுறுத்தல்
வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார்.
வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா காந்தி வயநாட்டுக்கு இன்று(ஜூன் 14) சென்றுள்ளார். அங்கு அவர் பேசியதாவது: “விமான விபத்தில் என்ன தவறு நடந்தது என்பதை கண்டறிவது மிக மிக முக்கியம்.
விசாரணை முகமைகள் அடுத்த சில நாள்களில், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு தெரிவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதன்பின் எதிர்காலத்தில், தவறுகளை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றைச் செய்து, மக்களின் உயிர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Advertisement
இந்த துயர நிகழ்வு, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது” என்றார்.
அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.
ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது.
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது.