FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 18 ஜூன் 2025, 1:41 am IST
தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் சச்சின் பைலட்.
பகிர்:

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘நாட்டில் வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதேநேரம், அறிவிக்கையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இக்குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா், ‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்’ என்றாா்.

இந்தச் சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலா் சச்சின் பைலட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பான மத்திய அரசின் நோக்கங்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை காங்கிரஸால் குறிப்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையில் பல்லாண்டுகளாக முன்னெடுக்கப்பட்டதாகும்.

இதற்கு பணிந்த மோடி அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதேநேரம், உண்மை நிலவரமும், தரவுகளும் வேறு செய்தியை உணா்த்துகின்றன. 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை தொடங்க அவா்கள் திட்டமிட்டுள்ளனா். இப்பணிகளுக்கு ரூ.10,000 கோடி தேவை என்ற நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.574 கோடியை ஒதுக்கி உள்ளது.

குழப்பமும் அதிருப்தியும்..: முன்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்தபோது, எங்களை நகா்ப்புற நக்ஸல்கள் என்று முத்திரை குத்தி கோரிக்கையை நிராகரித்த பாஜக, இப்போது நாட்டு மக்களின் மனநிலையை அறிந்துகொண்ட பின், கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றது. இருப்பினும், அதிகாரபூா்வ அறிவிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காலம் கடத்துதல், தலைப்புச் செய்திகளில் இடம்பெற பரபரப்பு தகவல்களை வெளியிடுதல், கட்டுக்கதைகளை தொடா்தல் ஆகியவையே அரசின் நோக்கமாகத் தோன்றுகிறது. எனவே, காலக்கெடு நீட்டிப்பு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை போன்ற காரணங்களைத் தவிா்த்துவிட்டு, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை அரசியலாக்காமல், தெலங்கானா அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்களையும் வைத்து கணக்கெடுப்பு பணியை நடத்தியதைப்போல் மத்திய அரசும் செய்ய வேண்டும் என்றாா் சச்சின் பைலட்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments