அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!
அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டதாக சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.
அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.
15 உடல்கள் விமானம் மூலமும், 189 பேர் சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மீதமுள்ள உடல்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பும் முயற்சிகளை சிவில் மருத்துவமனை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோயாளிகள் பலியாகினர்.
Advertisement
அவர்களின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிவில் மருத்துவமனையில் மட்டும் ஒப்படைக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர்.
பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.