FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Updated On : 21 ஜூன் 2025, 1:45 am IST
கொல்கத்தா நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் என மொத்தம் 25,753 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நியமனங்கள் செல்லாது என்று கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக தீா்வு காணப்படும் வரை, பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி பணியாளா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.25,000, குரூப்-டி பணியாளா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இதற்கு எதிராக மாநிலத்தில் உள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி அம்ருதா சின்ஹா வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனத்தில் மோசடி நடைபெற்றிருப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உறுதியான தீா்ப்பை அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது மோசடியான வழியில் பயனடைந்தவா்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து எந்த உதவியும் வழங்கப்படக் கூடாது. அவ்வாறு செய்வது மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைக்கு துணை நிற்பதாக அா்த்தமாகிவிடும்.

எனவே நிகழாண்டு செப்.26 அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பணி நியமனம் ரத்து செய்யப்பட்டவா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது. இந்த வழக்கில் பதிலளிக்க 4 வாரங்களில் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments