விமானம் ரத்தானதால் தேர்வெழுத முடியாமல் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு
விமானம் ரத்து ஆனதால் தேர்வெழுத முடியாமல் தவித்த பயணிக்கு நிவாரணம்...
விமானம் ரத்து ஆனதால் அந்த விமானத்தில் சென்று பல்கலைக்கழகத் தேர்வு எழுதத் திட்டமிட்டிருந்த பயணியொருவர் பாதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க வாடிக்கையாளர் குறைதீர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையிலுள்ள காத்கோபார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் மும்பையிலிருந்து தார்பாங்காவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்றுள்ளார். அதன்பின் திருப்பிவர, அதே நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். டிசம்பர் 8-ஆம் தேதி அவர் மும்பைக்கு வந்தடைய திட்டமிட்டிருந்தார். அன்றைய நாளில் அவர் முனைவர் பட்டம் பெறுவதற்கான தேர்வு மும்பையில் நடைபெறவிருந்தது.
இந்தநிலையில், எதிர்பாராத விதமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதனால் அவரால் அந்த விமானத்தில் மும்பைக்கு திட்டமிட்டபடி செல்ல இயலாத சூழல் உருவானது. இதனால் ஸ்தம்பித்த பயணி விமான நிறுவனத்திடம் மாற்று வசதி ஏற்பாடு செய்யக் கோரியுள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அவருக்கு பாட்னாவிலிருந்து கொல்கத்தாவுக்கு ஒரு விமானத்திலும் அதன்பின் அங்கு இறங்கி கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு வேறொரு விமானத்திலும் என இரு டிக்கெட்டுகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் புக் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை பெற்றுக் கொண்டு அவசர அவசரமாக கொல்கத்தா சென்று இறங்கிய பயணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மும்பைக்கு செல்லும் விமானம் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து புகாரளித்துள்ளார். அப்போது, அவர் பயணித்த கொல்கத்தா விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கும் முன்னரே, மும்பை செல்லும் விமானம் புறப்படும் என்றுஅந்த டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததை விளக்கியுள்ளனர்.
இதையடுத்து அவர், மேற்கண்ட விமான சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி மும்பையிலுள்ள மாவட்ட வாடிக்கையாளர்கள் குறைதீர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், விமான நிறுவனம் மீது தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட பயணிக்கு டிக்கெட் கட்டணத்துடன் ரூ. 30,000 நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.