காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கைது!
பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் கைது.
காலிஸ்தான் ஆதரவு பாபர் கால்சா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் இன்று கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் காலிஸ்தான் பயங்கரவாதிகளாம ஜக்ரூப் சிங், சுக்ஜித் சிங், நவ்ப்ரீத் சிங் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 பிஸ்டல் துப்பாக்கிகளும், 22 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி ஜலந்தர் பகுதியில் பாபர் கால்சா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மூவரும் வேறு ஒருவருக்காக ஆல்டோ காரில் காத்திருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், ஜக்ரூப் சிங் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருபவர். இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் அமிர்தசரஸ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்தார்.
இவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியான ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் நெருங்கிய உதவியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த கேங்ஸ்டர் குர்பிரீத் சிங் எனும் கோபி நவாஷெரியாவின் கீழ் இவர்கள் பணியாற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குர்பிரீத் சிங் மற்றும் கிறீஸ் நாட்டிலுள்ள அவரது நண்பர் லாடி பகாரியா இணைந்து இங்குள்ள இளைஞர்களை தேசதுரோக செயல்களில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் தெரிவித்தார். இந்தக் கும்பலின் முழு தொடர்புகள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பிரிட்டன் சென்றபோது அவரது காரை மறித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.