ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ரூ. 200 அபராதம்!
ராகுல் காந்திக்கு லக்னெள நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது பற்றி...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னெள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கு ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னெள மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
Advertisement
தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாகவும், அந்த பேட்டி ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பட்டதாகவும் வழக்கறிஞர் நிர்பேந்திர பாண்டே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்
இந்த வழக்கில் ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராக லக்னெள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகரை சந்திக்கும் முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.
இந்த மனுவை நிராகரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா, நேரில் ஆஜராக தவறியதற்காக ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதே குற்றச்சாட்டில் புணே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.