ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!
மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதை தவிர்த்து வருவது குறித்து....
இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப்புகளையே பெரும்பாலான மணப்பெண்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், ஆலியா பட் மற்றும் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானி என பல பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர் சப்யாசச்சி முகர்ஜி.
Advertisement
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 25,000 சதுர அடி பரப்பளவில் புதிய ஆடைக் கடையை சப்யாசச்சி திறந்துள்ளார். இதில் பேசிய அவர், இந்திய மணப்பெண்கள் திருமணத்தின்போது ஆடம்பர வேலைபாடுகள் உள்ள ஆடைகளை அணிய அதிக விருப்பம் காட்டுவதில்லை எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது,
''இந்திய திருமண சந்தை அதன் பாரம்பரிய சடங்குகளின் இறுதிக் கட்டத்தில் தற்போது உள்ளது. நாட்டிலுள்ள நுகர்வோர் விகிதம் மற்றும் அதிகரித்துவரும் மக்கள்தொகையால், உலகின் ஆடம்பர திருமண சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது.
எனினும் மணப்பெண்கள் மிகுந்த ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் உடைகளை விட, மெல்லிய வடிவமைப்புகளுடைய ஆடைகளையே அதிகம் விரும்புகின்றனர். இந்திய திருமண பாரம்பரிய முறை மாறும் தருவாயில் உள்ளது. அதே வேளையில் எளிமையான புடவைகளை அதிகம் விரும்புகின்றனர். இது இந்திய ஆடை சந்தையையும் மாற்றத்திற்குட்படுத்துகிறது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!