முகப்பு
இந்தியா

போலி மதிப்பெண் சான்றிதழ்: தனியார் பல்கலைக்கழக முதல்வர் மீது வழக்குப்பதிவு!

தனியார் பல்கலைக்கழக முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.

Updated On : 19 மார்ச் 2025, 4:10 pm IST
கோப்புப் படம் - Dinamani
பகிர்:

போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் தனியார் பல்கலை முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் புலாந்த்ஷார் பகுதியைச் சேர்ந்த மாணவர் தீபான்ஷு கிரி, ஜே.எஸ். தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மைத் துறையில் படித்து வந்தார்.

கல்லூரியில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் போலியானவை என்று பரவிய தகவல்களைத் தொடர்ந்து, இவரும் உடன் படித்த 5 மாணவர்களும் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து அறிய பல்கலைக்கழகத்தில் விசாரிக்க சென்றனர்.

Advertisement

Advertisement

அப்போது, பல்கலை நிர்வாகத்தினரால் வாயில் கதவுக்கு அருகிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். நிர்வாகத்தினருடன் வாக்குவாதம் ஏற்படவே அவர்களையும் மீறி மாணவர்கள் வேளாண்மைத் துறை அலுவலகத்துக்குச் சென்றனர்.

மாணவர்கள் வருவதை அறிந்த அந்தத் துறையின் ஊழியர்கள், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அலுவலகத்தைப் பூட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனைத் தொடர்ந்து, பல்கலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகித்த மாணவர் கிரி மார்ச்.18 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். இந்த நிலையில், பல்கலை முதல்வர் சுகேஷ் யாதவ், இயக்குநர் கௌரவ் யாதவ், நிர்வாகி பிஎஸ் யாதவ், வேளாண் துறை தலைவர் உமேஷ் மிஸ்ரா, பதிவாளர் நந்தன் மிஸ்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜே.எஸ். பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் நடைபெறுவது இது முதல்முறையல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு ஜே.எஸ். பல்கலைக்கழகத்தில் போலி பட்டங்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கிய வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது.

இந்த சோதனையின் போது, ​​பதிவாளர் நந்தன் மிஸ்ரா மற்றும் இடைத்தரகர் என்று கூறப்படும் அஜய் பரத்வாஜ் ஆகியோரை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

"மேலும் விசாரணையின் அடிப்படையில், பல்கலைக்கழக வேந்தர் சுகேஷ் யாதவ் தில்லி விமான நிலையத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.