முகப்பு
இந்தியா

ஒருவேளை சாப்பாடு, ஒருவேளை வெறும் வெந்நீர்: மோடி பகிர்ந்த விரத முறை!

ஒருவேளை சாப்பாடு, ஒருவேளைக்கு வெறும் வெந்நீர் மட்டும் குடிப்பேன் என மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 20 மார்ச் 2025, 12:39 pm IST
பிரதமர் மோடி - கோப்புப்படம்
பகிர்:

தன்னுடைய 70 வயதிலும் எவ்வாறு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், எந்தவிதமான உணவு முறையைக் கடைப்பிடிக்கிறேன் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார்.

லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டில், பிரதமர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த செய்யறிவு ஆய்வாளர், பல முக்கிய பிரபலங்களை பேட்டி எடுத்து வெளியிட்டு வரும் அலெக்ஸ் ஃப்ரிட்மேன், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணல் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

அந்த விடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விடியோவில், தனது உடல் ஆரோக்கியம், தான் பின்பற்றி வரும் விரத முறை உள்ளிட்டவற்றை மனம் திறந்து பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டில், தான் பின்பற்றும் பல்வேறு விதமான விரதமுறைகள் குறித்தும் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி. அது மட்டுமல்ல, தான் இவ்வாறு பல விரதங்களைப் பின்பற்றி வருவதாகவும், அப்படிப்பார்த்தால், ஓராண்டுக்கு கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் தான் விரதத்தில் இருப்பதாகவும், எல்லாவற்றையும் விட கடுமையான நவராத்திரி விரதத்தை தான் கடைப்பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விரத முறைகளை தான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருவதாகவும் அதுவே தனது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், மிகப் பழங்கால வழக்கப்படி, சதுர்மாஸ் எனப்படும் நான்கு மாத கால விரத முறை ஜூன் மாதம் மத்தியில் தொடங்கி தீபாவளி நாள்களுக்குப் பிற வரை நீடிக்கும். இந்த நாள்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவேன் என்று கூறியிருப்பதோடு, மழைக் காலத்தில், நமது ஜீரண சக்தி மந்தப்படும் காலம் என்பதால், அந்த நேரத்தில் நாம் மேற்கொள்ளும் இந்த விரத முறை நல்ல பலனளிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

நவராத்திரி நாள்களில் உணவே எடுத்துக் கொள்ளாமல், ஒன்பது நாள்களும் வெந்நீர் மட்டுமே குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், நாளடைவில் இதனை எனது உடல் நன்றாக ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் முதல் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின்போது, ஒன்பது நாள்களும் ஒரே பழத்தை தேர்வு செய்து ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் அதனை சாப்பிடுவேன். உதாரணமாக பப்பாளி என்று எடுத்துக் கொண்டால் ஒன்பது நாள்களும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவேன், அதுவும் பப்பாளி பழம் மட்டுமே என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.