பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு எல்லையில் ராணுவ தளபதிகள் உடன் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். மிலிட்டர் ஆபரேஷன் பொது இயக்குனர் உடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் போர் நிறுத்த புரிந்துணர்வை மீறி மே 10, 11இல் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. இதில் போர் நிறுத்தம் தொடர்பாக இருத்தரப்பிலும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்றும் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது.