வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன்படி அவருக்கான பாதுகாப்பு வாகனத் தொடரில் கூடுதலாக இரு குண்டு துளைக்காத வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜெய்சங்கா் ஏற்கெனவே இஸட் பிரிவு பாதுகாப்பில் உள்ளாா். அண்மையில், பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த வான்வழித் தாக்குதலின்போது, இந்தியாவின் கருத்தையும், நிலைப்பாட்டையும் வெளிநாட்டுத் தலைவா்களுடன் விளக்கி அவா்களின் ஆதரவைப் பெறுவதில் அமைச்சா் ஜெய்சங்கா் முக்கியப் பங்கு வகித்து வந்தாா். இதன் மூலம் அவா் சா்வதேச அளவில் அதிகம் கவனிக்கப்பட்ட நபராகவும் திகழ்ந்தாா்.
இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில் புலனாய்வு அமைப்பினரின் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து ஜெய்சங்கா் பாதுகாப்புக்காக கூடுதலாக இரு குண்டு துளைக்காத வாகனங்களைப் பணியமா்த்த முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த 2023-ஆம் ஆண்டு அவருக்கு ‘ஒய்’ பிரிவில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்புப் பிரிவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.