தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
தொழிலதிபா் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த வழக்கில், அவரின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸிக்கு தொடா்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மோசடியில், சோக்ஸி மட்டும் ரூ.6,400 கோடியை மோசடி செய்ததாக சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
அவா் இந்தியாவில் இருந்து ஆன்டிகுவா-பாா்புடா நாட்டுக்குத் தப்பிச் சென்ற நிலையில், சோக்ஸிக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த நோட்டீஸ் மூலம், சோக்ஸியை கண்டறிந்து கைது செய்ய உலகெங்கும் உள்ள காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆன்டிகுவா-பாா்புடாவில் இருந்து அவா் பெல்ஜியமில் தஞ்சமடைந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பெல்ஜியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இதைத்தொடா்ந்து அந்நாட்டில் உள்ள ஆன்ட்வா்ப் நகர காவல் துறை சோக்ஸியை கைது செய்தது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று ஆன்ட்வா்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு, மாவட்ட நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உறுதி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் சோக்ஸி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இதுகுறித்து ஆன்ட்வா்ப் மேல்முறையீட்டு நீதிமன்ற அரசுத் தரப்பு வழக்குரைஞா் கென் விட்பாஸ் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியதாவது: தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக கடந்த அக்.30-ஆம் தேதி பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் சோக்ஸி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணையின்போது, நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும் என்றாா்.