தில்லியில் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கனடாவில் இருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...
கனடாவில் இருந்து தில்லி வந்தடைந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொராண்டோ நகரத்தில் இருந்து தலைநகர் தில்லிக்கு, ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானம் ஏராளமான பயணிகளுடன் இன்று (நவ. 13) வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், விமானம் தில்லியில் தரையிறங்குவதற்கு 4 மணிநேரம் முன்னர் காலை 11.30 மணியளவில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, தில்லி காவல் துறையினருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்தி அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் மாலை 3.40 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனவும், இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் போலியானது எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!