முகப்பு
இந்தியா

தில்லி குண்டு வெடிப்பு! கைதான ஐந்து மருத்துவர்களும் பயங்கரவாத பின்னணியும்

தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான ஐந்து மருத்துவர்களின் பயங்கரவாத பின்னணி பற்றி

Updated On : 13 நவம்பர் 2025, 3:16 pm IST
தில்லி குண்டு வெடிப்பு
பகிர்:

தில்லி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பே, ஃபரிதாபாத்தில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரே இடத்தில் பணியாற்றிய ஐந்து மருத்துவர்கள், பயங்கரவாத அமைப்புடன் இணைந்து, நாடு முழுவதும் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டியிருந்ததும், இவர்களுக்கு பயங்கரவாத செயல்களுக்குப் பணம் திரட்டி, வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் முதலில் பெயர் வெளியானது முஸாமில். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வரும் முஸாமில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தங்கியிருந்த இடத்திலருந்து சுமார் 360 கிலோ எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது.

Advertisement

Advertisement

டாக்டர் உமர் முகமது என்று கூறப்பட்ட உமர் உன் நபி, தில்லி செங்கோட்டைப் பகுதியில் வெடிபொருள்களை நிரப்பிக் கொண்டு வந்து நவ.10 அன்று வெடிக்கச் செய்து பலர் பலியாகவும், ஏராளமானோர் காயமடையவும் காரணமாக இருந்துள்ளார்.

டாக்டர் அதீல், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், அவரது லாக்கரில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இவரும் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவர். உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மருத்துவமனயில் பணியாற்றி வந்த அதீல் அகமது, ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். 2900 கிலோ வெடிபொருள்கள், துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

டாக்டர் ஷாஹீன் என்ற பெண் மருத்துவர், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைக் கடத்த உதவியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவரது காரிலிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, டாக்டர் மொஹியுதின், இவர் தனக்கிருக்கும் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, கோயில் பிரசாதங்களில், ரிசின் என்ற விஷத்தைக் கலக்கி மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மௌல்வி இர்ஃபான் என்பவர் ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர்கள் மேலும் மூன்று கார்கள் வாங்கியிருப்பதாகவும், அவை வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

புது தில்லி மட்டுமல்லாமல், அயோத்தியா, பிரயாக்ராஜ் போன்ற இடங்களிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், உமருக்கும் முஸாமிலுக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், உமர் உன் நபி, சிக்னல் செயலி மூலம் மேலும் இரண்டு மூன்று பேரை இணைத்து ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் வெடிபொருள்கள் தயாரிக்க குருகிராமிலிருந்து 3 லட்சம் திரட்டி உரம் வாங்கியிருக்கிறார்கள்.

நவ.10ஆம் தேதி இரவு கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த நிலையில், கிட்டத்தட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், மனித உடல் பகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அது மனிதனின் முன் கைப் பகுதி என்று கூறப்படுகிறது.

ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உடல் பகுதி இருப்பது குறித்து தில்லி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தடய அறிவியல் நிபுணர்கள் மனித உடல் பகுதியை எடுத்துச் சென்றுள்ளனர்.

summary

About the terrorist background of the five doctors arrested in the Delhi blast incident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments