பிகார் மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் தலைவணங்குகிறேன்: நிதீஷ்குமார்
பிகார் மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் தலைவணங்குகிறேன் என முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த பிகார் மக்களுக்கும், வெற்றி உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் தலைவணங்குவதாக முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.14) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த நிலையில், பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்த பிகார் மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் நிதீஷ்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “2025 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், பிகார் மக்கள் எங்கள் அரசின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்காக, மாநிலத்திலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலைவணங்கி, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவிற்காகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் முழு ஒற்றுமையை வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.